ABOUT VAZHUVOOR TEMPLE

Image may contain: 1 person, indoor

கரி உரித்த சிவன்

வழுவூர்கோயிலில் உள்ள கஜசம்ஹார மூர்த்தி எனும் அற்புத படிமச் சிலையை அதன் முழு வடிவ அழகுடன் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்!

தினம்தினம் நடைபெறும் அர்ச்சனைகள், பூஜைகள், பூமாலைகள் மற்றும் உடை அலங்காரங்களுடன்தான் அந்த சிலையைப் பார்த்திருக்க முடியும்.

ஆபரணங்கள், உடை அலங்காரங்கள் களைந்து அதன் அற்புதத் திருமேனியை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? அச்சிலையை அலங்காரமின்றி தரிசிப்பது அப்படியொரு கிடைத்தற்கரிய அனுபவம்.

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்படிமச் சிலையின் உருவ அமைப்பை வருணித்துக்கொண்டே செல்லலாம். தேவார பதிகத்தில் கரிஉரித்த சிவன் என்றும் வடமொழியில் கஜசம்ஹார மூர்த்தி என்றும் இச்சிவனை வாழ்த்துகின்றனர்.

சிவனின் பல்வேறு ஆனந்தத் தாண்டவங்களில் கஜ சம்ஹார தாண்டவம் மிக முக்கியமான ஒன்றாகும். யானைமுகமுடைய கஜமுகா அசுரனின் அட்டூழியங்கள் தாங்காமல் தேவாதிதேவர்கள் ஈஸ்வரரிடம் முறையிடுவதற்காக தவம் செய்கிறார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று யானை முகமுடைய கஜமுக அசுரனை வதம் செய்யும் சிவபுராணக் காட்சிதான் இங்கு அற்புதமான சிலை ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் கீழே யானையின் தலை கிடக்கிறது. யானையின் மத்தகத்தின் மீது ஒரு காலை ஊன்றி தனது திரிசூலத்தால் வதம் செய்கிறார் ஈஸ்வரன். வதம் செய்யப்பட்ட

யானையின் தோலையே தனது மாலையாகத் தரித்து கொள்கிறார் ஈஸ்வரர். அதுவே ஈஸ்வர சிற்பத்திற்கு அக்னி திருவாட்சியாகவும் அமைந்துள்ளது. மேலே யானையின் இரண்டு கால்கள் தொங்கிய நிலையிலும், யானையின் வால் மேல் நீட்டிய நிலையிலும் காணப்படுகின்றன. கீழே இரண்டு கால்கள் கிடக்கின்றன.

யானையை வதம் செய்து ருத்ர தாண்டவம் ஆடும் இச்சிலையின் வடிவப் பேரழகை என்னவென்று சொல்வது? இடையே ஈஸ்வரனின் பாம்பு ஊர்ந்து சென்று மேலே சென்று முகம் காட்டுகின்றது. ஈஸ்வரனின் மற்றொரு கால் வளைந்து பாதத்தின் உள்ளங்காலைக் காட்டிய நிலையில் உள்ளது. இவ்வழகிய பாதத்தின் உள்ளங்காலைத் தொட்டுப்பார்த்துவிட வேண்டும் என்று நமக்கு எண்ண்த் தோன்றிவிடும். சிவனின் ரௌத்ரப்பார்வை, யானையின் உடல் உரித்து அதையே மாலையாக இடுதல், ஈஸ்வரனின் நான்கு கரங்கள் அக்கரங்களுக்கான ஆயுதங்கள், இரண்டு கால்களில் ஒன்று தூக்கிய நிலையிலும், இன்னொன்று ஊன்றிய நிலையிலுமான வடிவமைப்பு போன்ற பல உருவ பேதங்களின் கோர்வமைப்பிற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது இச்சிற்பம்.

ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடிவர, அதையழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன – அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை, பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது.

இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல முற்பட; இறைவன் எழுந்து வெளிப்படவே, முருகப் பெருமான் தன் தாய்க்கு “இதோ தந்தையார்” என்று சுட்டிக் காட்டினாராம். இவ்வரலாறு பற்றிய காட்சி கோயிலுள் சிற்பங்களாக உள்ளன.

மிக அற்புதமான உலோக வேலைப்பாடுகள் சோழ சிற்பிகளின் அதீத கற்பனை திறனை வெளிப்படுத்துகிறது. இனி வருங்காலங்களில் இப்படி ஓர் உலோக வார்ப்பினை உருவாக்க இயலுமா என்பது கேள்விக்குறிதான். மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் பத்தாவது கிமி யில் வழுவூர் உள்ளது.அதனால் இதனை இவ்வழி செல்வோர் அவசியம் கண்டு அருள் பெறுவீர்களாக

யாருக்கெல்லாம் தியானம் முழு ஈடுபாட்டுடன் கைவரப்பெறவில்லையோ அவர்கள் இந்த மூர்த்தியின் எதிரில் சில மணி துளிகள் தியானம் செய்வீராயின் எண்ணம் சிதறல் இல்லாத தியானம் கைகூடும்

VAZHUVOOR TEMPLE HISTORY

அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர். பிரளய காலத்தில் உலகமெலாம் அழிந்தும், அவ்வூர் அழியாமல் வழுவியதால் வழுவூர் என்று பெயர் ஏற்பட்டது.
இதற்கு புராணத்தில் சதயபுரி, பர கைலாசம், ஞானபூமி என்ற பல பெயர்கள் வழங்குகின்றன. கல்வெட்டுகளில் வழுகூர் என்று காண்கிறது.
இங்குள்ள கோயில் பிரமாண்டமானது. முன் ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரமும் ஐந்து கண்களும் கொண்டது. திருக்குளம் ஈசான தீர்த்தம் மிகவும் பெரியது. சுவாமி, அம்மன் சந்நதிகள் தனித்தனியாக உள்ளன. தல விருட்சங்கள் – தேவதாரு, வன்னிமரம்.
சுவாமியின் பெயர் வீரட்டேசுவரர், கிருத்திவாஸேசுவரர் (யானையின் தோலைப் போர்த்தியவர்) என்றும் பெயருண்டு. அம்பிகை – பாலாங்குராம்பாள். இவருக்கு – கிருபாவதி என்றும் பெயர்.
கல்வெட்டுகளில் சுவாமியின் பெயர் வீரட்டானம் உடையார், வழுவூர் நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரானின் ஐந்து முகங்கள் ஐந்து தீர்த்தங்களாக அமைந்துள்ளன. பெருமானே தீர்த்தமாக விளங்குகிறார் என்பது ஐதீகம்.
அட்ட வீரட்டங்களில் யானையாக வந்த கஜாசுரனை அழித்த தலம் இது. யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்தி, அதன் மத்தகத்தின் மீது நின்று இடது உள்ளங்கால் தெரியும் வண்ணம் ஊர்த்துவ தாண்டவம் ஆடுகிறார் பெருமான். இது நவதாண்டவங்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. நடன சபைகளில் ஞானசபையாகப் போற்றப்பெற்றுள்ளது.
சிதம்பரத்தில் “சிதம்பர ரகசியம்’ எனச் சொல்லப்படும் ரகசிய பிரதிஷ்டை அமைந்திருப்பது போல் இங்கும் கஜ சம்ஹார மூர்த்திக்குப் பின்னே ரகசிய யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கஜ சம்ஹார மூர்த்தியின் உள்ளங்காலை தரிசிப்பது மிகவும் சிறப்பானது என்று கூறுகின்றார்கள். சகஸ்ர லிங்க மூர்த்தி இந்தக் கோயிலில் சிறப்பானது. ஒரே லிங்கத்தில் ஆயிரம் சிறிய லிங்கங்கள் உள்ளன.
செப்பு, ஐம்பொன் திருமேனிகள் மிக அழகாக உள்ளன. பிட்சாடன மூர்த்தி சிறப்பானது. கஜசம்ஹார மூர்த்தி போல் திருமேனி எங்கும் கிடையாது. பக்கத்திலுள்ள அம்மன் விக்ரகத்தின் கையில் குழந்தை முருகன் உள்ளான். பெருமானை குழந்தை சுட்டிக் காட்டுவது போல் உள்ளது.

மாசி மகம் பொளர்ணமியன்று காலையில் கஜசம்ஹாரம் நடைபெறுகிறது. ஆண்டில் ஆறுமுறை கஜசம்ஹார மூர்த்திக்கும் நடராஜருக்கும் சமயாச்சாரியார்களுக்கும் அபிஷேகம் நடைபெறும்.
புராண வரலாறு: கஜாசுரன் என்ற யானை வடிவம் கொண்ட அசுரன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்தான். சிவபெருமான் அவனைக் கொன்று அவன் தோலை கிழித்துப் போர்த்திக் கொண்டார் என்பது புராண வரலாறு.
தாருகாவனத்து முனிவர்கள் சிவபக்தி இல்லாமல் செருக்குடன் இருந்தனர். அவர்கள் கர்வத்தை அடக்க பெருமான் வசீகரிக்கும் தோற்றத்துடன் அவர்களின் முன்பாகச் சென்றார். முனிவர்கள் அவரைக் கொல்ல நினைத்து யாகம் செய்து பலபொருள்களை அவர்மீது ஏவினார்கள். அவற்றையெல்லாம் அழித்தும், ஏந்தியும் அவர்களின் செருக்கை அடக்கினார்.
அவர்கள் பெருமானை வேண்டவே, அவர்களுக்கு ஞானோபதேசம் செய்தார்.
திருமால் மோகினி வடிவத்தோடு மோகனாம்பாளாக எழுந்தருளினார். பெருமான், மோகினியைப் பார்த்தவுடன் ஐயனார் பிறந்தார்.
முனிவர்களால் ஏவப்பட்ட அக்னி, புலி, மான், மழு, பாம்பு, முயலகன் மீது காலை ஊன்றி நர்த்தனம் புரிந்தார். இதுவே நடராஜப் பெருமானின் உருவத் தத்துவம்.
இத்தலம் பற்றி அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் உண்டு.

எங்கே இருக்கு?: நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் சாலையில் 10 கி.மீ. தொலைவில் வழுவூர் உள்ளது.